Tuesday, January 26, 2010

சமைக்குமுன்....


சமையல்னு தலைப்பைப் பார்த்தவுடன் வழக்கம் போல ஏதாவது குறிப்பா இருக்கும்னு தானே நினைச்சீங்க! அதுவும் உண்டு. அதுக்கு முன்பு சொல்ல வேண்டிய சில விஷயங்களைச் சொல்லிட்டு அப்பறமா குறிப்புகளுக்கு போகிறேனே:-)

சமையல் ஒரு கடல். இதில் எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரையும் சொல்லவே முடியாது. கொஞ்சமாகத் தெரிந்தாலும், ருசியாக சமைத்து, அழகாக பரிமாறத் தெரிந்தாலே போதும். வகை வகையாக சமைத்து, வாயில் வைக்க முடியாமல், கசகசன்னு பரிமாறினாலும் சாப்பிட தோன்றாது.



சமையலறை எனபது ஒரு பரிசோதனைக்கூடம் போல். ஒரே குறிப்பை, ஒரே அளவு பொருட்களை வைத்து 10 பேர் சமைத்தால், பத்தும் ஒன்று போல் இருக்காது. காய்கறி நறுக்கும் முறை, வதக்கும்(வேகும்) நேரம், அடுப்பின் எரிநிலை பொறுத்து ருசியும் மாறுபடும். இருக்கும் பொருட்களை வைத்து குறுகிய நேரத்தில் வாய்க்கு ருசியாக சமைப்பவர்களை சமையல் கலை நிபுணர்கள் என்றே சொல்லாம்.

சமைக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
சமையலறையில் சமைக்கப் போகும் பெண்ணே, அழகுக் கண்ணே,
சில புத்திமதிகள் சொல்லறேன் கேளு முன்னே :-)

அடுத்த நாளுக்கு என்ன சமையல்னு முந்தின நாளே யோசித்து முடிவு செய்து விட்டால், அடுத்த நாள் மளமளன்னு சமைக்க ஆரம்பிக்க முடியும்.  தேவையான காய்கறி, பொருட்கள் இருக்கான்னு பார்த்து, வேண்டுமானவற்றை வாங்கி வைத்து விடலாம்.

இல்லையென்றாலும் காலையில் எழுந்து பிரஷ் செய்யும் நேரத்தை வீணாக்காமல், யோசித்து வைத்துக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் லூஸ் ஹேர்தான் ஃபாஷன். அந்த ஃபாஷனை சமையலறையில் மட்டும் தவிர்த்து, எப்போதுமே சமைக்கப் போகும் முன் தலையை தூக்கி வாரி கிளிப் போட்டுக் கொண்டால், சமைக்கும் போது முடி உதிர்ந்து சமைக்கும் பொருட்களில் விழுவதைத் தவிர்க்கலாம்.

1. காய்கறிகளை அழகாக, ஒரே அளவில் சீராக நறுக்கினாலே சமையல் பார்க்க நன்றாக இருக்கும்.

2. சமைக்க வேண்டிய பொருட்களை (நறுக்கிய காய்கறிகள், எண்ணெய், மசாலாப் பொருட்கள், பாத்திரம்) தயாராக எடுத்து வைத்துக் கொண்டு சமைக்க ஆரம்பித்தால், அடுப்பில் வைத்தது தீயாமல், குறுகிய நேரத்தில் சமைக்க முடியும்.
3. அரைத்து செய்யும் சமையலாக இருந்தால், அரைத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
4. ஊற வைத்து செய்வதாக இருந்தால் முன்பே ஊற வைத்து தயாரான பின் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்.
5. பாத்திரத்தை பிடிப்பதற்கான டவலையோ, இடுக்கியையோ பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
6. அடுப்பை எப்போதும் மிதமான தீயில் வைத்து சமைக்க பழக வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே ஏற்றி வைக்க வேண்டும். பொருளும் தீய்ந்து போகாது, காஸும் மிச்சமாகும். (இப்போது இருக்கும் விலைவாசியில் 4 நாட்கள் கூட கேஸ் வந்தாலே கணவரிடம் ஒரு குட் வாங்கலாமே!)
7. காய்களின் தோல், வெங்காயத்தோல்  முதலியவற்றை நறுக்கி முடித்தவுடன் அதற்கான குப்பைத் தொட்டியில் போட்டு விட்டால் கிச்சன் முழுக்க ஓடாது.
8. சமைக்கும் போது காட்டன் துணி வகைகளையே உடுத்த வேண்டும். இல்லையேல் மேலே ஏப்ரான் கட்டிக் கொள்ளலாம்.
9. உபயோகித்த பின் கழுவ வேண்டிய பாத்திரங்களை உடனுக்குடன் கழுவுமிடத்தில் போட்டு விட்டால், இடம் நிறைய இருப்பது போல் இருக்கும் (சில பேர் சமைத்து முடித்தபின் சமையலறையைப் பார்த்தால் ஒரு போர்க்களம் போல் இருக்கும்).
10. மிளகாய், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் முதலியவற்றை எடுத்த பின் மறக்காமல் கைகழுவி விட்டால், பிறகு கண்ணைக் கசக்கிக் கொண்டு இருக்கும் அவசியம் இருக்காது.
11. பிரிஜ்ஜில் இருந்து எடுத்து சமைப்பதாக இருந்தால் அரை மணி முன்பே வெளியே எடுத்து வைத்தால், எரிவாயு மிச்சமாகும்.
12. எப்போதும் சமைக்கும் போது ஒரு ஜக்கில் தண்ணீர் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
13. வேலைக்கு செல்லும் பெண்கள் வார விடுமுறை அன்றே தேங்காயைத் துருவி கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கி பிரீஸரில் வைத்துக் கொள்ளலாம்.
14. அடுத்த 2 நாட்களுக்கு தேவையான வெங்காயம், பூண்டை உரித்து ட்ப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைக்கலாம்.
15. இஞ்சி, பூண்டு பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
16. புளிக்கரைல் செய்து, சிறிது உப்பு போட்டு கலக்கி பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
17. முந்தின நாள் இரவே காய்களை நறுக்கி டப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
18. கொஞ்சம் வெங்காய சட்னி, வத்தக் குழம்பு செய்து பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் சமயத்துக்கு உதவும்.
19. மொத்தமாக இட்லிக்கு மாவு அரைத்து வைத்துக் கொள்ளலாம். ஒரேயடியாக இட்லிக்கு என்றில்லாமல், அடை, ஆப்பம், பணியாரம், காஞ்சீபுரம் இட்லி என பிரித்து அரைத்து வைத்துக் கொண்டால் வெரைட்டியாக செய்ய முடியும். (இரவும் டிபன் செய்பவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்).
20. சப்பாத்திக்கும் மாவு பிசைந்து டப்பாவில் போட்டு மேலாக சுத்தமான துணியால் மூடி, டப்பாவை மூடி வைத்தால் 3 நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

...இன்னும் மணக்கும்.

தமிழ்த்தாய் மன்னிப்பாளாக!

வலைப்பூ முழுவதும் சுத்தத் தமிழில் எழுதலாம், இருப்பினும் பேச்சுத் தமிழுக்கு மாறினால் தான் பதிவுகள் இயல்பாய் இருக்கும். ஆகவே, இனி பேச்சுத்தமிழுக்கு மாறலாமென்று இருக்கிறேன்.

;;