Wednesday, March 31, 2010

சமைக்குமுன் - பகுதி 2


சமையல் பற்றிய தொடர்ச்சி ரொம்ப நாளாக எழுதாமல் அப்படியே இருக்கு. எப்படியாவது இன்று அடுத்த பகுதி எழுத முடிவு பண்ணியாச்சு.

போன பகுதியில் சமைக்கும் போதும், சமையலுக்கு முன்னும் செய்ய வேண்டியது பற்றி சொன்னேன். இப்ப சமையலுக்கான பொருட்களைப் பற்றி சொல்கிறேன்.

எப்பவும் ஒரு மாதத்திற்கு வேண்டிய பொருட்களை மாத ஆரம்பத்திலேயே வாங்கி வைத்துக் கொண்டால் இடையிடையே கடைக்கு ஓட வேண்டி வராது.

கடைக்கு செல்லுமுன் தேவையான பொருட்களை லிஸ்ட் எழுதி தயாராக வைத்துக் கொண்டால் அங்கு போய் குழப்பம் வராது. மளிகை சாமான்கள் தனியாகவும், மற்ற ஐட்டங்கள் (சோப், பேஸ்ட் போன்றவை) எழுதிக் கொண்டால் அந்தந்த பகுதிகளில் எடுக்க வசதியாக இருக்கும்.

விலை குறைவாக இருக்குன்னு தரம் குறைந்த பொருட்களை வாங்கி, வீணாகி தூக்கி எறிவதை விட கொஞ்சம் விலை கூடினாலும் தரமான பொருட்களை வாங்கினால் கொஞ்சம் நாட்கள் இருந்தாலும் கெடாமல் இருக்கும்.

முடிந்தவரை வீட்டுக்குத் தேவையான வற்றல், வடகம், ஊறுகாயை நாமே கோடை காலத்தில் போட்டு வைத்துக் கொண்டால் நம் டேஸ்ட்டுக்கு ஏற்றாற் போலவும் இருக்கும், மாத பட்ஜெட்டிலும் குறைக்கலாம்.

அந்தந்த மாதத்தில் வரும் பண்டிகையையும் மனதில் வைத்து பட்ஜெட்டில் போட்டுக் கொண்டால், பண்டிகை நேரத்தில் கடையில் நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை. உதாரணமாக ஜனவரி மாதம் என்றால் பொங்கல் வரும். மளிகை சாமான் லிஸ்டில் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் எல்லாம் சேர்த்து வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

விருந்தினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கும் மாதத்தில் கொஞ்சம் கூடவே எல்லா சாமான்களையும் வாங்கி வைத்து விட்டால், அவர்கள் வந்த பின் வாங்கும் நிலையை தவிர்க்கலாம்.

இப்ப வருட சாமான்கள் காலம் (பங்குனி மாதம்). துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி, கடுகு, சீரகம், மிளகு, சோம்பு, கொத்தமல்லி, வெந்தயம், கசகசா, மொச்சை, சுண்டல் எல்லாம் வருடத்திற்கு வாங்கி வைத்துக் கொண்டால் இடையில் கன்னா பின்னாவென்று எகிறும் விலைவாசியில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். அரிசி கூட வருடத்திற்கு வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்தப் பருவத்தில் வாங்கினால் எல்லாமே விலை குறைவாக இருக்கும்.

ஐயோடா! அப்படி வாங்கி வைத்தால் வண்டு, பூச்சி வருமேன்னு கேட்கறீங்களா? சரியாக பக்குவப்படுத்தி வைத்தால் கண்டிப்பாக 2 வருடம் வரை கூட வைத்திருக்கலாம். இப்ப நான் வைத்திருக்கும் பருப்பு போன்றவை வாங்கி 2 வருடமாகிறது. ஒன்றில் கூட வண்டு, பூச்சி கிடையாது. ஒவ்வொன்றாக எப்படி பாதுகாப்பதுன்னு அப்புறம் சொல்கிறேன்.

Thursday, March 25, 2010

Sunshine Award..




இது மேனகா & ஜலீலா எனக்குக் கொடுத்த அழகான அவார்டு. ப்ளாக் ஆரம்பித்ததில் இருந்து முதன்முதலில் கிடைத்த அவார்டு. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றி மேனகா & ஜலீலா!! பத்திரமாக வைத்துக் கொள்வேன்:-)

இந்த அவார்டை நான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாருக்கும் மற்றவர்கள் கொடுத்து விட்டார்கள்:-) 12 பேர் எனக்குத் தெரியவில்லைப்பா!

நான் கொடுக்க விரும்புவது :


இவங்க எல்லோரும் அவார்டை பெற்றுக் கொள்ளுங்கள். அதற்கான விதிமுறைகள் (!) இதோ:

//To the award winners, please pass this on to your favorite bloggers!

Here are the Rules:

1. Put the logo on your blog or within your post,
2. Pass the award on to 12 bloggers,
3. Link the nominees within your post,
4. Let the nominees know they have received this award by commenting on their blog,
5. Share the love and link to the person from whom you received this award.//
 



என் பெண்ணும் சமைக்க ஆரம்பிச்சுட்டா! இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? அதிசயம் தாங்க. கிச்சன் பக்கமே வேறு ஏதாவது வேலை இருந்தால் மட்டுமே எட்டிப் பார்ப்பவள் என் சின்ன மகள். வார இறுதியில் வீட்டுக்கு வந்தாலும், சனிக்கிழமை கூட நாங்கள் ஆபீசிலிருந்து வந்து டீ போட்டுக் குடித்தால் தான் குடிப்பாள். சமையல் செய்து வைத்து விட்டுத்தான் போகணும்.

இப்படியே இருந்தா எப்படிம்மா, சமையல் கத்துக்கோன்னு சொன்னா, நான் ஏன் கத்துக்கணும்பா. திருமணம் ஆன பின்பு எப்படி சமைக்கிறதுன்னு கேட்டா, நல்லா சமைக்கத் தெரிந்த ஒரு பையனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன்னு, இப்ப இல்லை பல வருஷங்களுக்கு முன்பே சொன்னவள்.

எப்படியோ இத்தனை நாட்கள் ஹாஸ்டல், பேயிங் கெஸ்ட்னு நாட்களைக் கடத்தி விட்டாள். இப்ப ஷேரிங்கில் இருக்கிறாள். இவளுடன் இருக்கும் இன்னொரு பெண் சமைக்க முடியாது வெளியிலேயே சாப்பிட்டுக் கொள்கிறேன்னு அப்படியே செய்கிறாள்.

என் பெண் மட்டும் நானே சமைத்துக் கொள்கிறேன், அதற்குத் தகுந்தாற் போல் அடுப்பு ஏதும் வாங்கித் தாருங்கள் என்று சொன்னதால், கடை கடையாக ஏறி விசாரித்து கடைசியில் இன்டெக்ஷன் அடுப்பை வாங்கினோம். வீடு மாற்றிய பின் எடுத்துச் செல்கிறேன், அதுவரை இங்கேயே இருக்கட்டும்னு சொன்னதால், நான் கொஞ்ச நாள் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தேன். ஒருவழியாக வீடு மாற்றிய பின் அடுப்பைக் கொண்டு போய் கொடுத்தோம்.

ம்ஹூம்.... அதில் சாதம் வைக்க சரி வரலைன்னு சொன்னீங்களே! சாதம் வைப்பது போல் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் ஒன்று பார்த்து வாங்கித் தாருங்கள் என்று சொல்ல, திரும்பவும் கடை கடையாக ஏறி இறங்கல். ஒருவழியாக அரை லிட்டர் அளவுள்ள ரைஸ் குக்கரை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தோம். பிறகும் ஒருவாரம் புது வீட்டில் ஃபிளக் பாயிண்ட் அடுப்பு பக்கத்தில் இல்லை. என்ன செய்வதுன்னு யோசித்துதான் செய்யணும்னா. ம்ம்ம்ம்ம்ம்..... எப்படியோ 6,000 ரூபாய்க்கு மேல் வாங்கிய அடுப்பும், குக்கரும் பயனின்றித் தான் இருக்கப் போகுதோன்னு யோசனையாக இருந்தது.

எனக்கு சமைக்க அரிசி, பருப்பெல்லாம் வேண்டும்னு சொன்னாள்னு அதையும் கொண்டு கொடுத்தோம். இந்தவாரம் வந்த போது ஹவுஸ் ஓனர் ஃபிளக் பாயிண்ட்டுக்கு பக்கத்திலேயே ஒரு டேபிள் போட்டுக் கொடுத்திருக்கார், இனி இந்த வாரத்தில் இருந்து சமைக்கலாம்னு இருக்கேன் என்று சொன்னாள். நேற்று போன் செய்து நான் இன்று ஃப்ரைடு ரைஸ் செய்தேன் என்றாள். எங்களால் நம்பவே முடியவில்லை!!! இரவு மாவு வாங்கி இட்லியும், தோசையும் செய்தேன். இன்று காலை தக்காளி தொக்கு, இட்லி. மதியத்திற்கு சர்க்கரைப்பொங்கல் (சரியான சர்க்கரைப் பொங்கல் பைத்தியம்) செய்தேன்னு சொன்ன போது, அட! நம்ம பொண்ணும் தேறி விட்டாளேன்னு இருந்தது. இவள் சமைத்ததை ஆபீஸில் உடன் பணிபுரிபவர்கள் சாப்பிட்டுவிட்டு சூப்பராக இருக்குன்னு சொல்லி இருக்கிறார்கள்!!!

இப்பல்லாம் இரவு 10 மணி ஆனால் போதும். போன் செய்து, என்னிடம் இதெல்லாம் இருக்கு, இதை வைத்து நாளைக்கு என்ன செய்யட்டும்னு ரெசிபி கேட்க ஆரம்பித்து விடுகிறாள். நான் சொன்னால்,அதெல்லாம் தான் எனக்குத் தெரியுமே என்கிறாள். ஆக, என் பெண் என்பதை அவளும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறாள் என்பதே சந்தோஷம் தான். எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டேன்.

எப்போதோ ஒரு முறை (+2 லீவில் என்று நினைக்கிறேன்) மாலையில் சாப்பிட ஏதாவது செய்கிறேன்னு வீட்டில் இருந்த சேமியாவைப் பார்த்து, அதை வேக வைத்து பாயசம் வைக்கலாம்னு, வேக வைத்து எடுத்தால் ஒரு பாத்திரம் நிறைய வந்திருக்கிறது (பின்னே! ரோஸ்டட் சேமியா அரை கிலோவை வேக வைத்தால் எவ்வளவு வரும் ! ?) ஆனால் வெகு சாமர்த்தியமாக சேமியாவை மூன்றாகப் பிரித்து பாயசம், வடை, கட்லெட்னு செய்து விட்டாள். எல்லோரும் நன்றாகவே சாப்பிட்டோம்னாலும் இன்றளவும் அதைச் சொல்லியே அவளைக் கிண்டல் செய்வோம்:-)

அப்படி இருந்த பெண் இன்று அவளுக்கு மட்டும்னு அளவு பார்த்து சமைக்கிறாள்னு பெருமையாகத் தான் இருக்கு. கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு புதினா நிறைய கொடுத்து விட்டார். அதை வைத்து என்ன செய்யன்னு கேட்டாள். மிக்ஸி இல்லாமல் எப்படி சட்னி அரைப்பாய்? அப்படியே ஈரத்துணியில் சுற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்துன்னு நான் சொன்னால், ஏற்கனவே நான் அப்படித்தான் வைத்திருக்கேன் என்கிறாள். மீதி வைக்கும் பாலைத் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைத்து மூடி வை, கெடாமல் இருக்கும்னு நான் சொன்னால், அதுகூடவா எனக்குத் தெரியாது, அப்படித்தான் வைக்கிறேன் மம்மி! என்கிறாள். காரட் வதங்க லேட்டாகும், அதை முதலில் வதக்கி விட்டுப் பிறகு தான் குடை மிளகாய் சேர்த்து வதக்கணுங்கிறது வரை தெரிந்திருக்கிறது!

இவ்வளவு விவரம் தெரிந்து வைத்திருக்கும் பெண், சமையலிலும் விரைவில் தேறி விட மாட்டாளா என்ன????

Tuesday, March 23, 2010

குக்(கர்) ஜாக்கிரதை...




சமையல் பகுதியில் சமைக்குமுன் சொல்ல வேண்டிய விஷயத்தில் சொல்லணும்னு நினைத்திருந்தேன். அதற்குள் எல்லாரையும் தொற்றும் வைரஸ் காய்ச்சல் என் ப்ளாக்கையும் தொற்றவே, அதற்கான வைத்தியத்தில் பொழுது போயிற்று. அப்பறம் ஊர்சுற்றல், உடம்பு படுத்தல்னு நாளைக் கடத்தியாயிற்று. இது யாருக்கும் தெரியாத புது விஷயம் அல்ல. ஆனாலும், இன்னும் அங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியால் தான் இதை எழுதுகிறேன். இதைப் படித்தால் விஷயம் தெரிந்தவர்கள கூட, இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பிரஷர் குக்கர் இல்லத்தரசிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் போல் தான். அதையும் சரியாகப் பயன்படுத்தினால் தான் நமக்கும் நல்லது, குக்கருக்கும் நல்லது.

குக்கர் கழுவும் போது மூடியில் உள்ள வெண்ட் வால்வு எனப்படும் ஓட்டையை நன்கு சுத்தப்படுத்தி கழுவ வேண்டும்.

அந்த ஹோல் எப்பவும் எந்த அடைப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கேஸ்கட்டை கழுவி தண்ணீரிலோ, ஃப்ரீசரிலோ போட்டு வைப்பது அதன் ஆயுள் காலத்தை நீட்டிக்கும்.

வெயிட் எடுத்து ஆறியபின், பைப்பில் வேகமாக வரும் தண்ணீரில் வெயிட்டை காண்பித்து, உள்ளே அடைத்திருக்கும் உணவுத்துகள்களை நீக்கி காய வையுங்கள். பருப்பு, சாதம் முதலியவை வேகும் போது கஞ்சி போன்றவை வெளியே வரும் போது வெயிட்டின் சந்துகளில் அடைத்திருக்கும்.

உள்ளே பாத்திரம் வைத்து சமைக்கும் போது குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டீர்களான்னு ஒரு முறைக்கு பலமுறை செக் செய்த பின் அடுப்பில் வையுங்கள். குக்கரில் தண்ணீர் இல்லாமல் வைத்தால் குக்கர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

அரிசிக்கு போதுமான தண்ணீர் வையுங்கள். அதிகமானால் பொங்கி வெளியே வரும். போதவில்லை என்றால், சாதம் தீய்ந்து விடும்.

குக்கரைத் திறக்கும் போது எப்போதும் கைப்பிடி பக்கம் மேலே தூக்காமல், எதிர்ப்புறத்தை மேலே உயர்த்தி திறக்க வேண்டும். அப்போதுதான் வேகமாக வெளியே வரும் ஆவி நம் கையில் படாமல் தப்பலாம்.

எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான விஷயம் - குக்கரின் கொள்ளளவு தெரிந்து அந்த அளவு நிரப்ப மட்டுமே (ரிப்பீட்டு......) மட்டுமே வைக்க வேண்டும்.

எப்போதுமே குக்கரின் முக்கால் பாகம் வரை மட்டுமே நிரப்பி, மீதி பாகத்தை பொருட்கள் வேக இடம் விட வேண்டும்.


அரை லிட்டர் அரிசி தான் வேகும் கொள்ளவு உள்ள குக்கரில் அதைவிடக் குறைவாக அரிசி வைக்கலாம். எக்காரணம் கொண்டும் அதை விடக் கூட வைக்கவே வைக்காதீர்கள். உங்களுக்கு சந்தேகம் இருப்பின், குக்கர் வாங்கும் போது கொடுத்த விளக்கப் புத்தகத்தை படித்த பின்போ இல்லை அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோ செய்யுங்கள். இப்பதான் கையிலேயே போன் இருக்கே! ஒரு போன் செய்து கேட்டாலே எவ்வளவோ கஷ்டங்களைத் தவிர்க்கலாம். இதை ஏன் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால்......

பதினைந்து நாட்களுக்கு முன்பு என் பெண் செய்த காரியம். 3 டமளர் அரிசி மட்டுமே வேகும் கொள்ளளவு கொண்ட குக்கரில் 6 டம்ளர் அரிசியைப் போட்டு அடுப்பில் வைத்து விட்டு, பக்கத்து அடுப்பில் இவள் வேலை செய்து கொண்டிருக்க, பிரஷர் தாங்காமல் குக்கரின் அனைத்து கேஸ் ரிலீஸ் சிஸ்டம் வழியாகவும் உள்ளிருக்கும் அரிசி, கஞ்சியோடு வெளியே வந்து பக்கத்தில் இருந்த பெண்ணின் வலது கையில் பட்டு கை முழுக்க கொப்புளம் போட்டு, கையை பார்க்கவே வயிறெல்லாம் கலங்கியது. இன்னும் புண் ஆறவில்லை. ஆறினாலும் கை முழுக்க தழும்பாக இருக்கும். நல்லவேளையாக குழந்தை வேறு அறையில் தூங்கிக் கொண்டு இருந்ததால் தப்பியது. இல்லையென்றால், இவள் சமைக்கும் போது ஒன்று இடுப்பிலோ அல்லது சிட்டரில் உட்கார்ந்து கிச்சனில் இருந்திருப்பான்.

என் பெண் செய்த இன்னுமொரு தவறு, பக்கத்து வீட்டில் சொன்னாங்கன்னு, மேலே உப்பு தூவியது. தேவையா இது? கொஞ்சம் யோசிக்காமல் செய்த காரியம் எவ்வளவு கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டது.

இதுபோல் கையில் ஆவி பட்டாலோ, கொதிக்கும் பொருட்கள் பட்டு விட்டாலோ குளிந்த நீரில் நன்கு காட்டியபின், புளித்த மாவு (இட்லி மாவு) அல்லது தேனை நன்கு தடவ எரிச்சலும் அடங்கும். கொப்புளமும் அதிகம் போடாது. தேன் தடவினால், காயம் ஆறிய பின், தழும்பும் வராது. சோற்றுக் கற்றாழை இருந்தாலும் அதை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஜெல்லுடன் தடவலாம்.

இனி மேலும் யாரும் இது போல் செய்யாதீர்கள்!!! முக்கியமாக சமைக்கும் போது குழந்தைகளை சமையல் அறைக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சமையலறை ஆபத்தான இடமாக மாறாமல் பார்த்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கு.

இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன்:-)

Sunday, March 21, 2010

நைட்டி கலாச்சாரம்




ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனுஷனைக் கடித்துங்கிற மாதிரி இந்த நைட்டி சமாச்சாரம் ஆகி விட்டது.

நைட்டி என்றால் இரவு உடைங்கிற அர்த்தமாவது நிறைய பேருக்கு தெரியுமா தெரியாதான்னு சந்தேகமாக இருக்கு.

ஆரம்பத்தில் இரவில் மட்டும் நைட்டி அணிவது,  அதிலும் மேல்தட்டு மக்கள் தான் அதிகம் அணிவது என்று இருந்தது. மெல்ல மெல்ல மாறி வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் பெண்களின் உடை நைட்டி என்பது போல் என்றாகியது. வெளியாட்கள் யாரும் வீட்டிற்கு வந்தால் உடை மாற்றிக் கொண்டு இருந்தனர். அதுவும் பிறகு மாறி ஒரு துப்பட்டாவோ, துண்டோ மேலே போட்டுக் கொள்ளவாவது செய்தனர். சமீபமாக அதற்கும் ஒருபடி மேலே போய் அப்படியே பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கும் போய் வர ஆரம்பித்து விட்டனர்.

சமீபத்தில் நான் கண்ட இரு காட்சிகள் இதற்கெல்லாம் மேலே..

நேற்று முன் தினம் காலையில் 10 மணிக்கு நாங்கள் டிபன் சாப்பிட ஹோட்டலுக்கு சென்றோம். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது ஒரு பெண் தனது குழந்தையுடனும், வேலைக்காரப் பெண்ணுடனும் அங்கு வந்தாள். அதிலென்ன இருக்கு, ஹோட்டல்னா நாலு பேர் சாப்பிட வரத் தான் செய்வாங்கன்னு சொல்றீங்களா? கூட வந்த வேலைக்காரப்பெண் நீட்டாக உடை உடுத்தி, நன்றாக தலைசீவி வந்திருந்தாள். அந்தப் பெண்ணோ தூங்கி எழுந்த முகத்தை கழுவி விட்டு சரியாக துடைக்கக்கூட இல்லாமல் தூக்கி சொருகிய முடியுடன் நைட்டியோடு வந்திருந்தாள். அதற்குப் போதுமான உள்ளாடைகள் கூட இல்லை. பார்த்தால் உடல்நிலை சரியில்லாதவள் போலும் இல்லை. நன்றாகவே இருந்தாள். ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் முகச் சுளிப்போடு பார்த்தனர். அப்படியே வந்து சாப்பிட்டு விட்டு சென்றாள். குழந்தைக்கு வேலைக்காரப் பெண் ஊட்டி விட்டாள். நிச்சயமாக பக்கத்திலேயே உள்ள வீட்டில் இருந்து தான் வந்திருக்க வேண்டும். பணம் எடுக்க ஆகும் நேரம் ஆகுமா, உடை மாற்ற? அந்த ஹோட்டல் ஒன்றும் மூலையில் உள்ள சாதாரண ஹோட்டல் அல்ல. டூரிஸ்ட்டுகள் வரும் மெயினான இடத்தில் உள்ள பிரபல ஹோட்டல் தான். தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக சாப்பிட்டு வெளியே வந்தோம்.

அதே நாள் மதியம் இதை விட கோபமேற்றும் சம்பவம்.

பீச்சில் நடந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் ஒரு பெண் நைட்டியுடன் வந்து பொருட்களை செலக்ட் செய்து வாங்கிக் கொண்டு இருந்தாள். எவ்வளவு பேர் வரும் இடம், நைட்டியுடன் வரலாமாங்கிற அறிவு கூடவா இருக்காது? அதுவாவது பார்க்க நீட்டாக இருந்தாலும் பரவாயில்லையே! சகிக்க முடியவில்லை.

அணிவதற்கும், வேலை செய்வதற்கும் சுலபமாக இருக்கிறது என்பதற்காக இப்படியா? வெளியில் வரும் போதாவது கண்ணியமான உடைகள் அணிய வேண்டும் என்று தோன்றாதா? நாமே இப்படி உடை உடுத்தி விட்டு பார்க்கும் ஆண்களைக் குறை சொல்லி என்ன பயன்? எங்கே போய்க் கொண்டு இருக்கிறோம் நாம்?

எந்த இடத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்ற விவஸ்தை கூடவா பெண்களிடம் குறைந்து போய் விட்டது? மற்ற அலங்காரத்திற்கு ஆகும் நேரம் ஆகுமா உடை மாற்ற?

சமீப காலமாக, பல டீன் ஏஜ் பெண்கள் உடை உடுத்துவது பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது. லோஹிப் பேண்ட், கண்டபடி வசனம் எழுதிய டீசர்ட்னு நன்றாக இருக்கும் ஆண்களைக் கூட கெடுப்பது போல் உள்ளது. பிள்ளைகளுக்கு தெரியவில்லை என்றால், அப்பெண்களின் அம்மாக்களாவது பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று சொல்லித் தர மாட்டார்களா? நம் பெண் நீட்டாக உடை உடுத்தி வெளியே செல்கிறாளா என்பதைக் கூட கவனிக்க முடியாத அளவு பிசியாகி விட்டார்களோ?

பெற்றோர்களுக்குன்னு சில கடமைகள் இருக்கு. அதில் உடை விஷயம் அத்தியாவசியமான ஒன்று. மாடர்ன் உடைகள் உடுத்த வேண்டாம்னு சொல்லவில்லை. பார்க்க கண்ணியமாக இருப்பது போல் உடுத்த சொல்லிக் கொடுக்கலாமே!

Friday, March 19, 2010

இந்த தொடரை தொடர அழைத்த ஆசியாவுக்கு மிக்க நன்றி.

1. லக்கியின் பிறந்தநாள் பதிவில் இமாவின் பின்னூட்டம்:

/தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். லக்கி பர்த்டே டு யூ லக்கி. ;)
செல்வி... இப்பதான் புரியுது, கொஞ்ச நாளா என் கனவில முதுகில் லவ்பர்ட் அமர்ந்து இருக்க ஒரு வெள்ளைப் பப்பி வந்த ரகசியம்!!/

2. லக்கியின் காத்திருப்பில் ஜீனோவின் பின்னூட்டம்:

/வாவ்...அழகான லக்கி!
லக்கி,லக்கி, லக்கி,லக்கி!
லவ் பண்ணத் தெரிஞ்சா நீ லக்கி! [டாங்க்ஸ் டு பிரபுதேவா! :)]
திஸ் லக்கி பாக்க ஜீனோ மாதிரியே வெஜிடேரியன் :) போலத்தான் தெரிகிறான் ஆன்ட்டி!
நீங்க பாதாம் சிக்கன் எல்லாம் தருவீங்களோ அவனுக்கு? இட்ஸ் ஓகே, ஆனா புரிட்டோ எல்லாம் கொடுத்துப் பழக்காதீங்கோ..அது அவன் வயித்துக்கு கெடுதல்! ;)/

3. லவ்பேர்ட்ஸ் இறுதிப் பகுதியில் ஆசியாவின் பின்னூட்டம்:

/லவ் பேர்ட்ஸ் பகுதி -2 இனிமேல் வருமா?ஆத்தா மாடு வளர்த்தா,கோழி வளர்த்தா மாதிரி,லவ் பேர்ட்ஸ் வளர்த்தா,லக்கி வளர்த்தா ,மீன் வளர்த்தான்னு டயலாக் எழுதலாம் போல.சூப்பர் செல்விக்கா செல்லங்களை(குட்டிமாவை) வைத்து எழுதிய இந்த தொடர் அருமை./

4. லக்கியின் பிறந்தநாளில் சாய் கீதாவின் பின்னூட்டம்:

/அட!
லக்கிக்கு பிறந்தநாளா???
சொல்லவேயில்ல!!!
பிறந்தாலும் இந்த லக்கி மாதிரி "லக்கியா" பிறக்கணும்னு
லக்கி இனமெல்லாம் பொறாமைப்படபோகிறது.
போட்டோவில் மட்டும் கேக்கை காட்டிட்டு எங்களுக்கெல்லாம் பெரிய பீஸாய்
"அல்வா" கொடுத்திட்டீங்களே செல்விக்கா!/

5. சமைக்குமுன் பதிவில் இலாவில் பின்னூட்டம்:

/உங்க பதிவுக்கான பதில் சொல்ல கொஞ்சம் வேலை செய்து படமெடுக்கணும்... டிப்ஸ் கொடுத்தா ஃபாலோ பண்ணனும் இல்லை.. புது வீடு வேற சும்மா சொல்லக்கூடாது... எக்ஸ்பீரியன்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் தான்... என்னை மாதிரி கத்துக்குட்டி கத்துக்குட்டி தான்....
அப்படியே சைட்ல யெங் பாட்டின்னு சொல்லிட்டாபோச்சு...
இந்த சமையல் அறை ஒழுங்கமைப்பு பத்தி ஒரு டியூசன் எடுங்க... என்னை மாதிரி "ஆர்கனைசேஷனலி சேலஞ்ச்ட்" க்கு உதவும்.../

6. எப்படி இருந்த சுடிதாரில் ஸ்னேகிதி ஸாதிகாவின் பின்னூட்டம்:

/தோழி,சுடியை சூட்டிகையாக்கிட்டீங்களே!!/

7. லவ் பேர்ட்ஸ் பகுதி-4-ல் கவிசிவாவின் பின்னூட்டம்:

/மனுஷங்களை மாதிரியே பறவைகளிலும் ரவுடி சொர்ணாக்கா இருக்காங்களா?!/

8. லவ் பேர்ட்ஸ் பகுதியில் கீதாவின் பின்னூட்டம்:

/எங்கப்பா, மாடு வளர்த்தாரு,ஆடு வளர்த்தாரு, கோழி வளர்த்தாரு,பூனை வளர்த்தாரு, அவ்வளவு ஏன், என்னைக்கூட வளர்த்தாரு, ஆனா லவ் பேர்ட்ஸ் வளர்க்கலியேயேஎஏஏஏஏ!/

9. குறிப்பு திருட்டு பகுதியில் ஜலீலாவின் பின்னூட்டம்:

/செல்வி அக்கா எல்லாத்தையும் போட்டுட்டாஙகளா, ஐய்யோ அய்யோ எங்கே போய் முட்டி கொள்வது, எல்லா வீட்டு சாப்பாட்டையும் திருடி பூட்டாங்களா
நானும் சம்பந்த பட்ட இடத்திலெல்லாம் போய் கமெண்ட் வழியா போய் எல்லார் சார்பாவும் சண்டை போட்டாச்சு பயன்ல்லை. இப்படி ஹே ஹே நான் செயிலுக்கு போரேன் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று வடிவேலு சொல்வது போல்./

10. இமாவின் 'தலைப்பிடக் கோருகிறேன்' பதிவில் செல்வியின் பின்னூட்டம்:-)

/உச்சாணிக் கொம்பில் ஒரு ஊர்கோலம்!!??/

ஆசியா, சுலபமாக சொல்லி விட்டீர்கள். மொத்தம் போட்டதே 16 பதிவு. அதற்கு வந்த பின்னூட்டங்கள் எல்லாமே என்னைப் பொறுத்தவரை முக்கியமானவைகள் தான். எனக்குப் பிடித்தமானவைகள் தான். அதில் என்னை சிரிக்க வைத்தவைகள் தான் மேலே உள்ளவை.
இமாவின் பரிசு கிடைத்ததால் என் பின்னூட்டம் எனக்குப் பிடித்தது.

எனக்கு இருக்கும் கொஞ்ச நேரத்தில் பதிவும் அதிக போட முடிவதில்லை. மற்ற பிளாக்குகளுக்கு போய் பின்னூட்டமும் கொடுக்க முடியலை. வருத்தமாகத்தான் இருக்கு. தயவு செய்து யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

இதுவரை பின்னூட்டம் அளித்தவர்களுக்கும், இனி அளிக்கப் போகிறவர்களுக்கும் நன்றி.

இத்தொடரைத் தொடர இமா, மேனகா மற்றும் கவிசிவாவை அன்புடன் அழைக்கிறேன்.

Sunday, March 7, 2010

செய்திக்கு சென்ஸார் வருமா?

சமீபமாக மீடியாக்களிலும், பத்திரிக்கைகளிலும் அடிபடுவது சாமியாரைப் பற்றிய செய்தி தான்.

பெட்டிக்கடைகளில் இருந்து ஐடி ஆபீஸ் வரை இது தான் பேச்சாக உள்ளது. திரும்ப திரும்ப பலமுறை ஒரு சினிமாக் காட்சியைப் போன்று மீடியாக்கள் போட்டி போட்டுக் கொண்டு காட்டியது. வந்த விருந்தினர்கள் முன்பு செய்தியைப் பார்க்கவே நெளியும் நிலை. குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு செய்தியைக் கூட நாம் பயமின்றி பார்க்க முடியுமாங்கிறது இப்ப சந்தேகமா இருக்கு.

பூட்டிய கதவுக்குள் நடந்தவற்றை அநியாயம், அயோக்கியத்தனம் என்று சொன்னவர்கள், அதை மறைத்து வைத்த காமிராவால் படம் எடுத்தது எந்த அளவு அயோக்கியத்தனம்? அந்த நிகழ்ச்சி ஒன்றும் இன்று, நேற்று புதியதாக நடந்தது போல் தெரியவில்லை. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது மட்டும் வெளியில் வர என்ன காரணமோ? அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேண்டாம்!!

ஒரு சாமியார் இவ்வாறு செய்யலாமான்னு கொதித்து எழும் மக்கள் தானே அவரை இந்த அளவுக்கு உயர்த்தியது? சாமியைக் கும்பிடலாம். அதற்கு எதற்கு இடைத்தரகர்கள்? என்னை சாமியாராக்கு, என்னை நம்புன்னு எநத சாமியார் சொல்கிறார்? யாரோ ஒருவர் எதையோ சொல்லப் போக, அதுவும் தற்செயலாக நடக்க அவர் சொல்வதெல்லாம் நடக்குதுன்னு ஒரு கோஷ்டி கிளப்பி விட்டு சுயலாபம் பார்க்கிறாங்க.

மக்களும் அதை நம்பி காசு, பணம்னு கொட்ட வேண்டியது. அப்பறம் அந்த சாமியாரைப் பற்றி ஏதாவது உண்மை தெரிய வரும் போது ஆத்திரப்பட்டு எல்லாவற்றையும் அடித்து நொறுக்குவது. திருந்தணும்னு நினைச்சிருந்தா ஒரு பிரேமானந்தா பற்றிய உண்மை வந்த போதே, எந்த சாமியார்களையும் மக்கள் ஏறெடுத்தும் பாராமால் இருந்திருந்தால், இன்று இப்படி அவன் அயோக்கியன், இவன் அயோக்கியன்னு சொல்லும் நிலை வந்திருக்குமா? தவறு முழுவதும் தம்மிடம் வைத்துக் கொண்டு ஏமாற்றுவர்களை குறை சொல்லி என்ன பயன்?

ஆங், நான் சொல்ல வந்தது இதுவே இல்லை.

செய்திகள் என்றால் நாட்டு நடப்பு, உலக நடப்புகளை தெரிந்து கொள்வதற்கு என்றிருந்த காலம் போய், செய்திக்கிடையே இப்படிப்பட்ட படங்களைக் காட்டினால் பெரியவர்கள், குழந்தைகள்னு உட்கார்ந்து எப்படி செய்திகளைப் பார்ப்பது?

இது போன்ற படங்களைக் காட்டும் செய்திகளுக்கும் இனி சென்ஸார் வருமா?

Friday, March 5, 2010

குறிப்பு திருட்டு

சமீப காலமாக ஏதாவது ஒரு தளத்தில் யாராவது ஒருவரால் கொடுக்கப்பட்ட குறிப்புகளை (சமையல் குறிப்புகள் உட்பட) எடுத்து கொஞ்சம் மாற்றியோ இல்லை அப்படியேவோ தனது பெயரில் வேறு தளத்துக்கு கொடுப்பது அதிகமாகி விட்டது. எதற்காக இந்த திருட்டு வேலை? பெயரும், புகழும் வேண்டியா? அப்படி வேண்டுமாயின், தன் சொந்த குறிப்புகளை, திறமையை கொடுக்க வேண்டியது தானே? இப்படி திருட்டுத்தனம் செய்து பேர் வாங்கச் சொல்லி யார் கேட்கிறார்கள்? கஷ்டப்பட்டு சொந்தக் குறிப்புகள் கொடுத்தவர்களின் மனது என்ன கஷ்டப்படும்?

கொஞ்ச நாள் முன்பு தான் தோழி ஜலீலாவின் குறிப்புகள் எடுக்கப்பட்டு வேறு பிளாக்கே வந்தது என்று சொன்னார்கள். குறிப்புகள் கொடுப்பவர்கள் எல்லாரும் எல்லா இடத்திலும் செக் பண்ணிக் கொண்டா இருக்க முடியும்?

நமக்குத் தெரிந்த சில விஷயங்கள் நம்மோடு போகாமல், பலருக்கும் பயனளிக்கட்டுமேன்னு தான் சொல்றோம். தேவையானவங்களுக்கு அந்த லின்க்கை கொடுத்து படிக்க சொல்ல வேண்டியதுதானே! தனக்கே வேண்டுமென்றால், பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளட்டுமே! அதை விட்டு என்னவோ தானே கஷ்டப்பட்டு கொடுத்த குறிப்பு போல் கொடுத்து இப்படி பேர் சம்பாரிக்க நினப்பது அவர்களுக்கே கேவலமாக இல்லையா?

எது எதைத்தான் திருடுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இன்னும் எவ்வளவு பேர் என்ன சொன்னாலும், இது போல் திருடுபவர்கள் மாறுவது போல் தெரியவில்லை.

அவங்க அவங்க குறிப்புகளை பத்திரமாக லாக்கரில் வைத்து பூட்டி வைத்துக் கொள்ளுங்கப்பா. இப்படி சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்:-) திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கிறது இதற்கும் பொருந்துமோ?

(அறுசுவை.காம் தளத்தில் உள்ள  என்னுடைய பல குறிப்புகள் பலராலும் திருடப்பட்டு வெவ்வேறு தளங்களில் வேறு பெயர்களால் பதியப்படுவதைக் கண்டு ஏற்பட்ட மன உளைச்சலின் வெளிப்பாடே இந்தப் பதிவு:-( )

Thursday, March 4, 2010

ஒரு நாள் முட்டைகள் எப்படி இருக்குன்னு சட்டிக்குள் எட்டிப் பார்த்தால்....

ஒரு முட்டை கூட இல்லை. நாங்களும் முட்டை கெட்டுப் போயிருந்தால் ஓடாவது இருக்குமேன்னு தேடிப் பார்த்தோம். எங்கும் எதுவும் இல்லை. குட்டிம்மா பாவமாக உட்கார்ந்திருந்தது. அப்பறமாகத்தான் கடைக்காரன் சொன்னான், முட்டையை பல்லி சாப்பிட்டு இருக்கும்னு. முதல்லேயே தெரிந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமேன்னு ஆதங்கமாக இருந்தது.

முட்டை காணாமல் போன கோபத்தில் அம்மா மாதிரியே இதுவும் துணையைக் கொத்த ஆரம்பித்தது. எதற்கு வம்புன்னு ஆண் குருவியைக் கொண்டு போய்க் கொடுத்திட்டோம். கொஞ்ச நாள் தனியாகவே குட்டிம்மா இருந்தது. வீடு மாற்றி புது வீட்டிற்கு வந்தோம். நாங்களே வீடு வேலைகள் நடந்து கொண்டு இருந்ததால், இருக்க இடமின்றி ஒரு ரூமில் அடைந்து கொண்டிருக்க, கூண்டும் நாளுக்கு ஒரு இடமாக இருந்தது.

ரொம்ப பாவமாக இருக்கவே வேறு ஒரு ஆண் குருவி வாங்கி வந்து விட்டோம். அதனோடு ரொம்ப நல்லா விளையாடியது. மீண்டும் குட்டிம்மா இரண்டு முட்டை வைத்தது. இம்முறை ரொம்ப முன் ஜாக்கிரதையாக மயிலிறகை கூண்டு மேல் வைத்து பல்லி வராமல் பாதுகாத்தோம். ஆனாலும் இரண்டு முட்டையும் கெட்டுப் போய் ஒரு நாள் சட்டிக்கு வெளியே தூக்கிப் போட்டு விட்டது. இந்த முறை குட்டிம்மா கோபப்படவில்லை. துணையுடன் எப்போதும் போல் விளையாடியது.

பெண் பிரசவத்திற்கு வந்து பிரசவமும் ஆச்சு. அதன்பின் எனக்கு ரொம்ப முடியாமல் போய் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை. சர்ஜரி முடிந்து என்னால் எதையும் கவனிக்க முடியாமல் இருந்தது. தினையும், தண்ணீரும் என் கணவர் தான் வைப்பார். என்னைப் பார்த்தாலே கூப்பிடும். பேசி விட்டு போய் விடுவேன்.

என்ன ஆச்சுன்னு தெரியலை. ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தால்....என் குட்டிம்மா இறந்து கிடந்தாள்.

என்னால் அழக் கூட முடியவில்லை. நெஞ்செல்லாம் கனக்க குட்டிம்மா வெளியேறினாள். மீதி இருந்த ஒரு குருவியைக் கொடுத்திடலாமான்னு யோசிச்சேன். வேண்டாம், அதற்குத் துணை வாங்கி விடலாம்னு எல்லாரும் சொல்லவே, கொஞ்ச நாட்கள் கழித்து, வேறு ஒரு குருவி வாங்கி விட்டோம். பெண் குருவின்னு கேட்டு வாங்கினோம். பழகி கொஞ்சம் பெரிதானதும் தான் தெரிந்தது, அதுவும் ஆண்குருவி தான்னு.

கொடுத்துட்டு வேறு மாற்ற மனசின்றி இரண்டுக்கும் சேர்த்து இரண்டு பெண்குருவி வாங்கி விடலாம்னு முடிவு செய்தாச்சு. ஆனால், கூண்டு ஒரு ஜோடிக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கு. அதனால் வீட்டு வேலை செய்யும் போது மீதி ஆன மரத்தை வைத்து பெரிய கூண்டு செய்து தரச் சொல்லி தச்சரிடம் சொல்லிக் கொண்டே இருக்கோம். அவரும் இன்றைக்கு, நாளைக்குன்னு நாள் கடத்திகிட்டே இருக்கார்.

இப்போதைக்கு இரண்டு ஆண் குருவிகளும் விளையாடிக் கொண்டு இருக்கு. போன வாரம் வந்த என் பேரனுக்கும் லவ்பேர்ட்ஸ் தான் ரொம்பப் பிடிச்சுது. அதன் சத்தம் கேட்கும் போதெல்லாம் கிட்டே போய்ப் பார்ப்பான். கொத்தமல்லி கொடுத்தால், அவனும் சேர்ந்து கொடுத்தான். அவனுக்கு அதை கையில் தொட்டுப் பார்க்க ரொம்ப ஆசை. அவை பயந்து சட்டிக்குள் போய் உட்கார்ந்து கொண்டன. இதுவே என் குட்டிம்மாவாக இருந்தால், தானே வந்து கையில் உட்கார்ந்து கொள்ளும் :-((

இப்பல்லாம் ரொம்பவும் அதன் அருகில் போய் விளையாடக் கூட கஷ்டமாக இருக்கு.

இவ்வளவுக்கு பின்னும் லவ்பேர்ட்ஸ் ஆசையை விடாமல், இருப்பவற்றை வளர்த்துகிட்டு இருக்கேன். புது கூண்டு செய்து குடும்பம் பெரிதான பின்னர் அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

இப்போதைக்கு லவ்பேர்ட்ஸ் பற்றிய தொடர் நிறைவுறுகிறது:-)

;;