Thursday, April 1, 2010


விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் -2 தொடர்ந்து பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி. பெரியவர்களே பாட கஷ்டப்படும் பாடல்களை சின்ன குழந்தைகள் பாடுவது ரொம்ப அழகு. அதிலும் குறிப்பாக ஸ்ரீகாந்த். ஆறே வயது நிரம்பிய அசத்தல் குழந்தை.

அத்தனை போடியாளர்களின் நடுவில் தன் திறமையால் தேர்வாகி, இதுவரை தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த்.

எந்த சுற்றானாலும் தன் இனிய குரலால் எல்லோரையும் வசப்படுத்தி வந்தார். அவனது குரல் இனிமைக்கு இந்நிகழ்ச்சியைப் பார்ர்க்கும் அனைவருமே கண்டிப்பாக ரசிகராகத்தான் இருந்திருப்பார்கள்.

கடைசி எட்டு பேரில் ஒருவராக இருந்த ஸ்ரீகாந்த் இந்த வார எலிமினேஷனில் வெளியேறினார். முடிவை சொன்ன மனோ அவர்கள், ஸ்ரீகாந்தை மடியில் உட்கார்த்தி வைத்து வாழ்த்தி பாடியது கூட அந்தக் குழந்தைக்கு புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. ஸ்ரீகாந்த் இல்லாமல் எப்படி இன்னும் 6 வாரம் போகப் போகுதுன்னு நினைச்சாலே கஷ்டமா இருக்குன்னு மனோ சொன்னார். நீ ஏதாவது பாட விரும்புகிறாயா என்று கேட்டவுடன், எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று அக்குழந்தை பாட, மனோவே அழுது விட்டார். அவர் வெளியேறும் போது கலங்காதவர்கள் இல்லை. நம் கண்களும் குளமாக பிரியா விடை கொடுத்தோம்.

அக்குழந்தையின் பெற்றோர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இப்படி குழந்தையைப் பெற என்ன புண்ணியம் செய்தார்களோ? இந்த சின்ன வயதிலேயே எவ்வளவு திறமை!!!

ஹை பிட்ச் பாடல்களுத்தான் அவர் குரல் ஏற்றதாக இருந்தாலும், எல்லாப் பாடல்களையும் பயமின்றி அவர் பாடுவதே தனி அழகு தான். அதுமட்டுமன்றி மற்றவர்கள் அளவுக்கு அவர் வயதும் இல்லை. இந்த வயதில் இவ்வளவு தூரம் பாடல்களை நினைவில் வைத்துப் பாடுவதே பெரிய விஷயம். அதற்காவே அவரைப் பாராட்டலாம். எது எப்படியோ இந்நிகழ்ச்சியில் அவர் பாடுவது எல்லோருக்கும் ஒரு எண்டர்டெயினிங்காவே இருந்தது.

அவரின் திறமைகள் வளர்ந்து, பெரிய பாடகராக வர நாமும் வாழ்த்துவோம்.

கொசுறு: விரைவில் ஸ்ரீகாந்தை வெள்ளித்திரையிலும் காணலாம். சத்யராஜின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்காராம்.

;;