Friday, January 29, 2010

கேட்டு பதறிய சம்பவம்!


ஆனந்த விகடனில் வெளிவந்ததாக ஆபீசில் சொன்னார்கள். நான் படிக்கவில்லை. பிறந்த குழந்தைக்கு மயக்க கலக்கத்தில் படுத்துக் கொண்டே பால் கொடுத்ததால், குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாம். அதன் கண்களை தானம் செய்தார்களாம். கண்தானம் செய்யப்பட்ட விஷயம் தான் பெரிதாகப் பேசப்பட்டது. ரொம்ப நாட்களாக என் மனதை வதைத்துக் கொண்டிருந்த படுத்துக் கொண்டே பாலூட்டிய விஷயத்தை அனைவரும் மறந்து விட்டனர். ஆனால் எனக்கு மட்டும் நெருடிக் கொண்டே இருந்ததன் விளைவே இந்த இடுகை.

நிறைய பெண்கள் செய்யும் தவறே இது தான். எழுந்து உட்கார்ந்து பால் கொடுக்க சோம்பேறித்தனம். படுத்துக் கொண்டே பால் கொடுப்பது எவ்வளவு ஆபத்தான செயல் என்று இப்பொழுதாவது மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி.

கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளாவது மூச்சு தாங்கி குடித்து விடும்.  பச்சிளங்குழந்தைகளுக்கு படுத்து கொண்டு பால் கொடுத்தால் மூச்சு முட்டும். அப்படி கொடுக்கும் போது நாம் கையால் அழுத்திப் பிடித்து கொடுக்கவும் முடியாது. அப்படியே தூங்கிப் போனால், பால் குழந்தையின் மூக்கிலும் ஏறும் வாய்ப்பு உள்ளது. பிரசவம் ஆனபின் களைப்பாகவும், மயக்கமாகவும், அசதியாகவும் தான் இருக்கும். ஆனால், அதையெல்லாம் பார்த்து குழந்தையின் விலை மதிக்க முடியாத உயிருடன்
விளையாடலாமா?

எவ்வளவு தூக்கக் கலக்கமாக இருந்தாலும், எழுந்து, நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு (முதுகுக்கு தலையணை கூட வைத்துக் கொள்ளலாம்) குழந்தையின் தலையை முழங்கைக்கு மேல் வைத்து மார்போடு சேர்த்து பிடித்துக் கொள்ள வேண்டும்.

நீளும் கை குழந்தையின் தொடை வரை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்த கையின் ஆட்காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே மார்பகத்தை அழுத்திப் பிடித்து குழந்தையின் வாயில் வைத்து பால் புகட்ட வேண்டும்.

பால் அதிகமாக சுரந்தால் பிறந்த குழந்தைகளால் (ஒரு மாதம் வரை) மூச்சு தாங்கி குடிக்க முடியாது. அப்போது விரல்களை நெருக்கிப் பிடித்து பால் குழ்ந்தையின் வாய்க்குள் போகும் அளவை கட்டுப்படுத்த முடியும்.

பால் கொடுத்து முடிந்ததும், குழந்தையை தோளில் சாத்தி முதுகில் சிறிது நேரம் லேசாக தட்டிக் கொடுத்து, (குழந்தைக்கு)ஏப்பம் வந்த பிறகே படுக்க வைக்க வேண்டும்.

முதல் குழந்தை என்றால் நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாது. கூட இருக்கும் பெரியவர்கள் தான் சொல்லித் தர வேண்டும்.

நிறைய மருத்துவமனைகளிலும் ஏகப்பட்ட ஃபீஸ் வாங்குகிறார்களே தவிர, பிரசவம் முடிந்தபின் இதையெல்லாம் எந்த  மருத்துவரும் பொறுமையாக விளக்கிச் சொல்வதில்லை. அங்கு இருக்கும் நர்சுகளோ குழந்தைக்கு அம்மாவை பால் கொடுக்க சொல்லுங்கம்மான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க (சமீபத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆன போது நேர்ந்த அனுபவங்கள் தான்).

கொடுமை என்னவென்றால் கூட இருப்பவர்களும் படுத்துகிட்டே பால் கொடுக்கச் சொல்வார்கள். அதைப் பார்த்து, அறிவுரை சொல்லியும் இருக்கிறேன். சரி சரிம்பாங்க. நாம் இந்த பக்கம் வந்ததும் அவங்க வழிக்கு போயிடுவாங்க.நல்லதுக்கு தானே சொன்னார்களென்று தெரிவதில்லை.

இப்பவும் அப்படித்தான், மனம் பொறுக்காமல் கொட்டி விட்டேன். இதைப் படித்து ஒரு சிலராவது புரிந்து கொண்டால் போதும்.

பத்து நிமிட கஷ்டம் பார்த்து
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த
பத்தரை மாற்றுத் தங்கத்தை
பறி கொடுத்து விடாதே மகளே!

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க, கிடைத்ததொரு செல்வத்தை நம் சோம்பேறித்தனத்தாலும், அஜாக்கிரதையாலும் இழக்கலாமோ?

9 comments:

இலா said...

Nice Information!!! Thanks for sharing

செந்தமிழ் செல்வி said...

நன்றி இலா. தொடர் வருகைக்கும் நன்றி.

drbaloo said...

Normally when we receive infant patients with earache, we use to ask the mother, the feeding posture. Because when a mother feeds her baby in bed, more chance the milk go to the middle ear through narrow connection between the throat and ear and cause acute middle ear infection.

ஹுஸைனம்மா said...

அட நம்ம செல்வியக்கா பிளாக் தொடங்கிருக்காங்க!! சொல்லவேல்ல!! சந்தோஷம் அக்கா.

நல்ல தகவல் & அறிவுரை. நானும் இந்தத் தப்பெல்லாம் செஞ்சிருக்கேன்னாலும், அது பிள்ளைக்கு ஒரு ஏழெட்டு மாசம் ஆனப்புறம்தான். (ஆனாலும் தப்புத்தான்).

செந்தமிழ் செல்வி said...

வாங்க டாக்டர். தங்களின் வருகைக்கும், மேலான பதிவுக்கும் நன்றி. படுத்துக் கொண்டு பால் கொடுத்தால், காது வலியும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டுங்கிற நல்ல தகவலைக் கொடுத்திருக்கீங்க. மிக்க நன்றி. அப்பப்ப வந்து உங்களின் கருத்துக்களையும் சொல்லுங்க.

வெல்கம் ஹுசைனம்மா! உன்னோட பிளாக் ஃபாலோயராக முயற்சித்தேன். முடியவில்லை:-)
வருகைக்கு நன்றி.
மிகவும் தப்பான இந்த செயலை யார் செய்தாலும் நீயும் எடுத்து சொல். ஏதோ நம்மால் முடிந்தது.

geetha said...

செல்விக்கா!
இதுமாதிரி இப்ப நிறைய நடக்குது. கொஞ்சம் நாள் முன்னாடிகூட பிளேனில் மலையாளி பெண் ஒருவர் 4 மாத குழந்தைக்கு தூக்கத்தில் பால் கொடுத்து இதுபோல் நிகழ்ந்துவிட்டது.
அதேபோல் வெளிநாட்டிலிருந்து (எகிப்து என்று நினைக்கிறேன்) குவைத் வந்த பிளேனில் ஒரு மாத குழந்தைக்கு இப்படி நிகழ்ந்துவிட்டது.
ரொம்ப உபயோகமான தகவலினை சொன்னது நிறைய பேருக்கு பயனுள்ளதாய் இருக்கும்!

டி எஸ் ஜெயந்தி said...

வாழ்த்துக்கள் செல்வி
நீங்களும் ப்ளாக் ஆரம்பிச்சுட்டீங்களா?
நல்ல உபயோகமான தகவல்.
அது போல் கர்ப்பமாக இருக்கும் போது செய்யக்கூடியவை / கூடாதவைகளைக்கூட எழுதுங்கள். வருங்கால சந்ததிக்கு உதவியாக இருக்கும்.
ஜெயந்தி மாமி

செந்தமிழ் செல்வி said...

மிக்க நன்றி கீதா!

ஜெயந்தி மாமி,
வாங்க, நலமா? ரொம்ப நாளாச்சு பேசி...

//நீங்களுமா?//
அப்ப நீங்களுமா?;-)

அதைப் பற்றி எல்லாம் எழுதத்தான் இந்தப் பகுதியையே ஆரம்பித்தேன். நிதானமாக எழுதணும்.
வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.

jayanthi said...

செல்வி
நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தால் சொல்கிறேன்.
உங்கள் ப்ளாக் ரொம்ப சிம்பிளாக, அழகாக, நன்றாக, தெளிவாக, படிக்கத்தூண்டும்படி இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
ஜெயந்தி மாமி

Post a Comment