Tuesday, July 6, 2010

நன்றி நவில்கிறேன்!!!!


என்னுடைய பிறந்த நாளன்று ஐம்பதாவது பதிவை போட்டு விட வேண்டுமென்று எண்ணி இருந்தேன். அதற்குள் ஏதேதோ நடந்து, அடுத்த பதிவே அன்று தான் போட முடிகிறது.

மருதாணி இட்ட கைகளின் படமும், பதிவும் போட்ட போது அடுத்த பதிவு அந்தக் கைக்கு ஆபரேஷன் ஆன செய்தியைப் பற்றித்தான் இருக்கும் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. என் பெண் வாராவாரம் வீட்டிற்கு வருவது போல் தான் அந்த வாரமும் வீட்டிற்கு வருவதற்காக பஸ் ஏறிய அரை மணி நேரத்திற்குள்ளேயே அவள் ஏறிய பஸ் விபத்துக்கு உள்ளாகியது. கடந்த இருமுறையும் மற்றவர்களுக்கு அடிபட்ட போதெல்லாம் பெண்ணிற்கு அதிக அடியில்லாமல் தப்பித்துக் கொண்டாள். இந்த முறை மற்றவர்களுக்கெல்லாம் அதிகமாக அடிபடவில்லை. என் பெண்ணிற்கு மட்டுமே அதிகமான அடி.

நான்கு வழிச்சாலையிலும் விபத்து ஏற்படுத்த முடியுமென அதி வேகமாக பஸ்ஸை ஓட்டி முன்னால் சென்ற பஸ் பிரேக் போட்ட போது, கண்ட்ரோல் இல்லாமல் போய் முன்னால் சென்ற பஸ்ஸில் அடித்த டிரைவரைக் குற்றம் சொல்வதா? ஓடும் பஸ்ஸில் நின்று கொண்டும் கடலை போட்டுக் கொண்டு சரியாக கம்பியைப் பிடிக்காமல் என் பெண்ணின் கையின் மேல் விழுந்த மூன்று பேரை குற்றம் சொல்வதா? அவ்வளவு வேகமாக பிரேக் போட்டும் கம்பியை விடாமல் பிடித்திருந்த என் பெண்ணைக் குறை சொல்வதா? அது எப்படியோ, விழுந்தவர்களின் பாரம் தாங்காமல் இடது கை எலும்பு முழங்கைக்கு மேல் இரண்டாகவே ஒடிந்து விட்டது. அவ்வளவு வலியிலும் ஒடிந்த கையை பேக்கின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு எங்களுக்கு போன் செய்து விபரத்தை சொல்லி விட்டு, கிட்டதட்ட 2 மணி நேரம் கார் வரும் வரை காத்திருந்தது பெரிய விஷயம்.

மனிதாபிமானமே இல்லாமல் நட்ட நடு ரோட்டில் இரவு நேரத்தில் பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டு விட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ்ஸை எடுத்துக் கொண்டு போன கண்டக்டரையும், டிரைவரையும் என்ன சொல்வது? உடன் பயணித்த இன்னும் இரண்டு பெண்கள் மட்டுமே துணைக்கு இருந்திருக்கிறார்கள். நல்லவர்களுக்கு நன்றி சொல்லி மகளை சென்னையின் பிரபல எலும்பு முறிவு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அழைத்துச் சென்ற போது ஆபரேஷன் செய்ய வேண்டி இருக்குமென நாங்கள் நினைக்கவே இல்லை. ஆபரேஷன் செய்தால் தான் கை விரைவில் குணமாகும் என டாக்டர் சொல்ல, வேறு வழியின்றி இரண்டு நாட்கள் கழித்து (வீக்கம் குறைந்ததும்) ஆபரேஷன் நடந்தது. மூன்று நாட்கள் கழித்துதான் மகளையே கண்ணில் கண்டோம் (அந்தக் கதையை தனியாக சொல்கிறேன்).
                                                 (ஆபரேஷனுக்கு முன்பு)

இட்ட மருதாணி கூட அழியவில்லை. அந்தக் கை முழுவதும் கட்டுடன் பார்த்த போது கலங்கிய மனதை, பெண்ணின் முன் அழக் கூடாதென கஷ்டப்பட்டு தேற்றிக் கொண்டேன். ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து கட்டு பிரித்ததும் வீடு வந்தோம். பிசியோதெரபிஸ்ட் வந்து தினமும் கைக்கு பயிற்சி கொடுக்கிறார். தற்போது லீவில் தான் உள்ளாள். ஒரு மாதம் கழித்து திரும்ப செக்கப் போகும் போது டாக்டர் சொல்வதைப் பொறுத்துத்தான் ஆபீஸ் போக முடியும்.


அந்த நேரத்தில் என்னிடம் போன் செய்து விசாரித்தவர்களில் நிறையப் பேரை நான் நேரில் பார்த்தது கூட இல்லை. இங்கும், அறுசுவையிலும் என் மகளுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நெஞ்சம் நெகிழ நன்றி சொல்வதைத் தவிர நான் வேறு என்ன சொல்ல முடியும்? அவர்களும், அவர்களின் குடும்பமும் நலமாக இருக்க வேண்டுமேன நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் _()_


37 comments:

athira said...

செல்வியக்கா, உங்கள் பதிவு பார்க்க மனதில் என்னவோ செய்கிறது. தலைப்பாகையோடு போய்விட்டதாக நினைத்து ஆறுதல் அடையுங்கள்.

மகள் விரைவில் நலமாகி வேலைக்குத் திரும நானும் பிரார்த்திக்கிறேன். உங்களை மீண்டும் இங்கு கண்டது மகிழ்ச்சியே.

athira said...

Happy Birthday Selviyacca.

Menaga Sathia said...

இந்த பதிவை படித்ததும் கண் கலங்கி விட்டது...மகளுக்கு விரைவில் நலம் பெற நிச்சயம் என் பிரார்த்தனை உண்டு... இப்போ எப்படி இருக்காங்க??

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! வணங்குகிறேன்....

ஜெய்லானி said...

படிக்கும் போதே மனசு கனக்குது. என்ன சொல்றதுன்னே தெரியல . தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுன்னு நினைச்சிகுங்க. மீண்டும் நலமாக இறைவனை வேண்டுகிறேன்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப வருத்தமா இருக்கு செல்வியக்கா.. கண்கள் கலங்கிவிட்டது. உங்கள் மகள் சீக்கிர‌மாக இறைவன் அருளால் குணம் பெறுவார். கவலைப்படாதீங்க செல்வியக்கா. எல்லாம் சரியாகிரும்.

ப்ரியமுடன் வசந்த் said...

சீக்கிரம் மகள் குணமடைய ப்ரார்த்தனைகள்

GEETHA ACHAL said...

தங்களுடைய மகள் கூடிய சீக்கிரத்தில் குணமடைய கடவுளிடம் வேண்டு கொள்கிறேன்...கவலைபடாதிங்க...எல்லாம் சீக்கிரத்தில் சரியாகிவிடும்...

Mahi said...

கஷ்டம்தான் செல்விஅக்கா..உங்க மகள், பட்ட காலிலேயே படும்ங்கறமாதிரி மூன்று முறை விபத்தில் சிக்கிருக்காங்க. இத்தோடு எல்லாம் சரியாகிவிடும்.அவர் விரைவில் குணமடைய என் ப்ரார்த்தனைகள்!

உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மகளை பத்திரமாகப் பாத்துக்கோங்க.

இமா க்றிஸ் said...

விபரம் சொன்னதற்கு நன்றி. யோசித்துக் கொண்டே இருந்தேன்.
கவலைப் படாதீங்க. இனி மகள் விரைவில் சுகமாகிருவாங்க. எங்கள் பிரார்த்தனைகள் உங்களோடு எப்பவும் இருக்கும்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் இமா

ஹைஷ்126 said...

கவலை வேண்டாம். விரைவில் குணமாகிவிடும். மஞ்சள் நிறம் நினைவு வைத்துக் கொள்ளவும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

ammulu said...

பதிவைவாசித்ததும் மனம் கனத்துவிட்டது.கவலைப்படவேண்டாம்செல்வியக்கா.நிச்சயம் மகள் விரைவில் குணமடைந்துவிடுவார்.என் பிரார்த்தனையும் உங்களுக்கு எப்பவும் உண்டு.
பிறந்ததின வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

கவலை வேண்டாம் தோழி.எல்லாம் சரியாகி,விரைவில் பழைய படி பணி செய்வாள் உங்கள் சின்ன மகள்.

grace said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா நான் உங்கள் சேலத்து மீன் குழம்பு வைத்து பார்த்து சூப்பராக வந்தபோது பதில் பதிவு போட போனபோதுதான் உங்கள் bloggai பார்த்து முதல் முறையாக படித்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு அக்கா இங்கிருந்து போய் பாண்டிச்சேரியில் தான் ஏதோ காலேஜ் or ஸ்கூல் எதிரில் stationery கடை வைத்திருகிறார்கள். உங்கள் மகள் விரைவில் குணமடைய நாங்களும் பிரார்த்திகிறோம். கிறேஷ்ரவி குவைத்

'பரிவை' சே.குமார் said...

கவலை வேண்டாம் விரைவில் பழைய படி பணி செய்வார் உங்கள் மகள்.

செந்தமிழ் செல்வி said...

அதிரா,
அப்படி நினைத்துத்தான் ஆறுதல் அடைகிறோம். பிரார்த்தனைக்கும், ஆறுதலுக்கும் நன்றி.

செந்தமிழ் செல்வி said...

வாழ்த்துக்கு நன்றி அதிரா!

செந்தமிழ் செல்வி said...

மேனகா,
ஆறுதலுக்கு நன்றி.
50வது பதிவிற்கு இன்னும் நிறைய பாக்கி இருக்கு.
வாழ்த்துக்கு நன்றி மேனகா!

செந்தமிழ் செல்வி said...

சகோதரர் ஜெய்லானி,
உங்களின் வேண்டுதலுக்கு மிக்க நன்றி! முன்பின் அறிமுகமில்லா எனக்காக பிரார்த்தனை செய்யும் உங்களைப் போன்றோரின் அன்பு தான் இப்ப எனக்கு ஆறுதல் அளிக்கிறது. நன்றி!

செந்தமிழ் செல்வி said...

சகோதரர் ஸ்டார்ஜன்,
தங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி! எவ்வளவு திடமாக இருந்தாலும், நம் அன்பிற்கு உரியவர்களுக்கு ஏதாவது என்றால் மனம் தாங்குவதில்லை. தேற்றிக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

செந்தமிழ் செல்வி said...

ப்ரியமுடன் வசந்த்,
பிரார்த்தனைக்கு மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

கீதாச்சல்,
வேண்டுதலுக்கு மிக்க நன்றி! இவ்வளவு பேரின் பிரார்த்தனை மகளை விரைவில் குணமாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இலா said...

I tried posting as soon as i saw the blogpost. I hope Kruthi feels better.. She will be alright soon. My prayers are with your family.

Belated Happy Birthday !

மனோ சாமிநாதன் said...

இப்போது கிருத்திகாவின் கை எப்படி இருக்கிறது? வலி நிறையவே குறைந்து விட்டதா? கையை பழையபடி அசைக்க முடிகிறதா?
உங்கள் பதிவில் உங்களின் கலக்கம், மனத்துயரம் அனைத்தும் வெளிப்பட்டிருந்தது. ஒரு தாயாக உங்கள் மன வலி எனக்குப் புரிகிறது. இந்த அதிர்ச்சி அனுபவத்தின் பாதிப்பு இன்னமும் குறையாமல்தான் இருக்கும். தைரியமாக இருங்கள். பெண்ணுக்கும் தைரியம் சொல்லுங்கள். சீக்கிரம் முழுவதுமாகக் குணமாகி விடும்.

Priya dharshini said...

thangal magal viraivil kum adaiya valthukkal...Ellam eraivan seyal,nallathe nanaiyungal...pls dont worry...

'பரிவை' சே.குமார் said...

ippa eppadiyirukku magalukku....

normalayachcha...

time irunthal enathu valaikku varavum....

http://www.vayalaan.blogspot.com

Asiya Omar said...

இதென்ன கொடுமை இறைவா?மனசை என்னமோ அழுத்துகிறது.கண் கலங்கி விட்டது.இன்று தான் அதிராபக்கம் போகும் பொழுது நன்றி நவில்கிறேன் என்று பார்த்தவுடன் ஓடி வந்தால் இந்த செய்தி.ஒரு குறையும் இல்லாமல் நல்லபடியாக கை குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தேவன் மாயம் said...

நண்பரே! விரைவில் சரியாகிவிடும்.அவர் குணமடைய என் பிரார்த்தனைகள்!

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Menaga Sathia said...

செல்விமா எப்படி இருக்கிங்க?? இப்போ மகளுக்கு கை குணமாகிவிட்டதா?? உங்களின் சேலம் மீன் குழம்பு செய்து என் பதிவில் போட்டுள்ளேன்..சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி!!

http://sashiga.blogspot.com/2010/08/blog-post_8451.html

ஜெய்லானி said...

இப்போது கை சரியாகிடுச்சா..? பழையப்படி வேலைக்கு போறாங்களா..?..!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

செல்விம்மா.. ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு இங்க எட்டிப் பாத்தா இப்படி ஒரு துயரமான சம்பவம்.. நீங்க விவரிச்ச விதத்துலையே இங்க வலிக்க ஆரம்பிசிட்டது :( இப்போ எப்படி இருக்காங்க மகள்? எலும்பு நல்லபடியா சேர்ந்திருக்கிறதா? முடியும் போது தகவல் சொல்லுங்க.. டேக் கேர்..

Jaleela Kamal said...

செல்வி அக்கா நல்ல இருக்கிறீர்க்லா. உங்கள் பொண்ணு எப்படி இருக்கிறாள்.
ஊரில் வந்த போது விசாரித்ததில் பொண்ணுக்கு பரவாயில்லை என்றீர்கள் , இனி ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்.

இமா க்றிஸ் said...

செல்வி,
மகள் மற்றும் உங்கள் குடும்பத்தார் அனைவரும் நலம்தானே!

வாழ்த்துக்கள். ;)

kavisiva said...

செல்விம்மா என்னாச்சும்மா? எப்படி இருக்கீங்க? ஏன் இந்தப் பக்கம் பார்க்கவே முடியலை.

Ayeesri said...

செல்விம்மா,
நலமாக இருக்கிறீர்களா? கிருத்திகா நலமா?
உங்கள் உற்சாகமூட்டும் வாக்கியங்கள்/எண்ணங்கள்/வார்த்தைகள் சோர்ந்தோர்க்கு டானிக் போல்.
நீங்கள் எல்லோரும் நலம் தானே?

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html

அஸ்மா said...

செல்வியக்கா! நீங்கள் ப்ளாக் வைத்திருப்பது எனக்கு சமீபத்தில்தான் தெரியும். இதற்கு முன்பே உங்கள் மகளுக்கு நடந்த ஆக்ஸிடெண்ட் பற்றி கேள்விப்பட்டு அறுசுவையில் பதிவு கொடுத்திருந்தேன். இதைப் பார்த்தவுடன் இங்கும் கொடுக்கிறேன். இப்போது மகள் சகஜ நிலைக்கு வந்தாச்சா? நார்மலா அந்தக் கையால் வலியின்றி வேலை செய்ய‌ முடிகிறதா? ஃபோன் செய்தாவது உங்களுடன் பேசவேண்டும் என்று நினைத்து, உங்கள் ஃபோன் நம்பரைத் தேடினால் கிடைக்கவில்லை. முடிந்தால் உங்கள் நம்பரை எனக்கு மெயில் பண்ணுங்கள்.

Post a Comment